சிறுகதை
எம். பிரபு
கவினுக்கு கடையில் சாப்பிடுவது அவ்வளவாகவே பிடிக்காது. அதற்கு கடைகளின் உணவின் தரமோ அல்லது தூய்மையின்மை முதன்மை காராணம் அல்ல. அதுவும் ஒரு காரணமாக இருந்தாலும், அதிமுக்கிய காரணம் விலைவாசிதான்.
ஆடிக்கு ஒரு தடவை அல்லது அம்மாவாசைக்கு ஒரு தடவைதான் கடையில் சாப்பிடுவான். அவன் வேலை செய்யும் பேரங்காடியின் கிடங்கிற்கு மதிய உணவை வீட்டிலிருந்தே கொண்டு வந்து விடுவான். பெரும்பாலும் நண்பன் கார்த்திக் அழைத்தால் மட்டுமே அவனுடன் கடையில் சாப்பிடுவான். அதுவும் பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான்.
இந்தப் பெரிய நகரத்தில் சிக்கனம் பிடித்தால்த்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும். நண்பன் கார்த்திக் கடைக்கு அழைத்தான் என்றால் பெரும்பாலும் அவனே உணவுக்கான பணத்தை செலுத்தி விடுவான். கவின் எதுவும் கவலைப்ப்டத் தேவை இல்லை. சமயங்களில் இவனும் பணத்தைக் கட்டுவதுண்டு.
என்ன ஒன்று, கடைக்குச் சென்றால் கார்த்திக் அறு அறுவென்று அறுப்பான்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, கார்த்திக் கவினை தன் காரில் ஏற்றிக் கொண்டு ஒரு சீன கோப்பிக் கடைக்குச் சென்றான். காடியில் பாட்டு சத்தமாக ஒலிக்கவிட்டு, பேசாமல் பாடல்களை ரசித்துக் கொண்டு வந்தனர்.
இதுதான் முதல் தடவை கவின் இந்தக் கோப்பிக் கடைக்கு வருவது. கடைக்குள் வந்ததும்.
“யாரைத்தான் நம்பறது?” என்று கேட்டுக் கொண்டே காடி சாவியை மேசை மீது போட்டான் கார்த்திக்.
நாற்காலியில் அமர்ந்தவாறு கவினைப் பார்த்து ஏதோ ஒரு விரக்தி அவன் முகத்தில் தெரிந்தது.. கடையில் நிறைய பேர். பாதி சீனர்கள், பாதி இந்தியர்கள்.
“என்ன சொல்லற?” கவினும் கைபேசியை அந்த வட்ட மேசை மீது வைத்தபடி அமர்ந்தான்.
“அவர் ஒன்னு சொல்லுறாரு, இவர் அப்படி சொல்லுறாரு,” மீண்டும் கடுப்பாக பேசினான் கார்த்திக்.
“நீ யாரைப் பத்தி சொல்ற?” கவின் கடையினுள் சுற்றும் முற்றும் பார்த்தவாறே கேட்டான்.
“இது கூட உனக்குத் தெரியலியா?”
“சொன்னா, ஒழுங்கா சொல்லணும். பாதியிலேர்ந்து ஆரம்பிச்சா எனக்கு என்னா புரியும்?”
“சரி... சரி, என்ன குடிக்கிற?”
கார்த்திக் யாரையோ தேடினான்.
“தேத்தண்ணி சொல்லு,” என்றான் கவின்.
“கப்பா, கிளாஸா?”
“கப்பு போதும்.”
“ஆ மோய்! மரி சினி. உனக்கு சாப்பிட...?”
கார்த்திக், கடை முதலாளியின் மகளை அழைத்தான். அப்போதுதான் அவள் ஒரு சீனக் கிழவர் மேசையில் தேநீரை வைத்துவிட்டு, அவர் உட்கார்ந்திருந்த மேசையைத் துடைத்தாள். பிறகு இவர்கள் அருகில் சுறுசுறுப்பாக நடந்து வந்தாள்.
“ச்சா சியு பாவ்,” என்ற கவின், அவளையே இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஆ மோய், பாகி தே கிச்சி சத்து, தே ஐஸ் சத்து. ச்சா சியு பாவ் சத்து, லோ மாய் காய் சத்து.”
“இனி சாஜா?” என்று கேட்டாள்.
“யா.”
சீனப் பெண் மீண்டும் வேகமாய் அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
“காலையிலேயே ஐஸா? சரி, என்னத்த புலம்பிக்கிட்டு இருந்த, அதச் சொல்லு.”
கவின் வேறு ஒரு சிந்தனையில் இருந்தான். கார்த்திக் பேசுவதை முகம் கொடுத்துக் கேட்காமல், அங்கு பசியாறலை சுவைத்துக் கொண்டிருக்கும் சில சீன யுவதிகளை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.
“எல்லாம் நம்ம நாட்டு நிலவரத்தைப் பத்தித்தான். வேற எதைப் பத்தி நான் பேசப் போறேன்,” என்ற கார்த்திக், சுவர் பக்கமாகத் தலையைச் சாய்த்தான். நேற்று அவன் சரியாகத் தூங்காதது கண்களில் தெரிந்தது.
“அதுதான் தெரியுமே. எத்தனை வருசம் ஆனாலும் ஒன்னும் மாறப்போறதில்லையே,” பேசிக் கொண்டே கவின் ஆர்டர் எடுத்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண் மீதும் கண்களை அலையவிட்டான்.
“இவரை நம்பி நாம ஓட்டு போட்டோம். ஆனா இப்போ பாரு, ஆட்சிக்கு வந்தப்பறம் விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சி. கோவில் பிரச்சனையும் இன்னும் அதிகமாயிடுச்சி,” கைகளைக் கட்டிக்கொண்டு லேசாகக் கண்களை மூடினான் கார்த்திக்.
“விலைவாசிதான் வருசம் வருசம் ஏறுதே. கோவில்கள நாம முறையா பராமரிக்கல. நீ ராத்திரி சரியா தூங்கலியா? சாய்ஞ்சிட்ட போல...”
“நீ என்ன, இவருக்கு ஆதரவா பேசுறியா? நேத்து எனக்கும் மலருக்கும் தகராறு. ஹால்ல படுத்தேன். தூங்கின மாதிரியே இல்ல.”
“ஆதரவாவும் பேசல, எதிர்ப்பாவும் பேசல. உண்மை அதுதானே,” கவினுக்கு இப்படிச் சொல்வதே சரியாகப்பட்டது. கார்த்திக்கின் குடும்ப விஷயத்தைப் பற்றி கேட்க ஆர்வமில்லாததால், அவர்களின் தகராற்றைப் பற்றி ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை.
“டோல் கட்டணம், பெட்ரோல் விலையெல்லாம் குறைப்பாருன்னு சொன்னாரு. ஒன்னும் கொறைஞ்ச மாதிரித் தெரியலியே?”
“எல்லாம், சுலபமா சொல்லிடலாம். ஆட்சிக்கு வந்தாத்தான அதோட கஷ்ட நஷ்டம் எல்லாம் தெரியும், புரியும்,” என்றான் கவின்.
கவின், ஆர்டர் எடுத்தப் பெண்ணைத் தேடினான். கேட்ட உணவு இன்னமும் அவர்கள் மேசைக்கு வரவில்லை. அவள் வெவ்வேறு மேசைகளுக்குச் சென்று ஆர்டர் எடுத்துக் கொண்டும் பசியாறலை அனுப்பிக் கொண்டும் இருந்தாள்.
“இத்தனை வருசம் அதுலத்தான இருந்தாரு. தெரியாதாக்கும்? வந்தவனுங்க எல்லாம் மக்களுக்குப் பாடுபடற மாதிரித் தெரியல,” கண்களைத் திறக்காமலேயே பேசினான் கார்த்திக்.
“நாடு நல்லாத்தானே வளர்ச்சியடைஞ்சிருக்கு.”
“என்னத்த வளர்ச்சியடைஞ்சிருக்கு? அவனவன் பதவிக்கு வந்துட்டா என்னத்த கொள்ளையடிக்கலாமுன்னுதான் பார்த்துக்கிட்டு இருப்பானுங்க போல.”
கவின், கார்த்திக்கைப் பார்த்துச் சிரித்தான். அந்தச் சிரிப்பு கார்த்திக் சொன்ன கருத்துக்குச் சிரித்தானா அல்லது அவன் கண்களை மூடியபடியே பேசுவதைப் பார்த்துச் சிரித்தானா என்று அவனுக்கே புரியவில்லை.
“இவரு அப்படி ஒண்ணும் கொள்ளையடிக்கலியே?”
“நீ சொல்லுற. எந்தப் புத்துக்குள்ளே என்ன பாம்பு இருக்கும்ன்னு யாருக்குத் தெரியும்.”
“சரி. நீ என்னத்த எதிர்பார்த்து இவருக்கு ஓட்டுப் போட்ட?” என்று கேட்ட கவின், அலைபேசியில் கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பது ஆகிவிட்டது. இன்னமும் பசியாறாமல் இருப்பது அவனை என்னவோ செய்தது.
“நம்ம இந்தியருக்கு மந்திரிப் பதவிகள், வேலை வாய்ப்பு, நல்ல பொருளாதாரம், ஓற்றுமைன்னு எல்லோரும் எதிர்பார்த்த மாதிரிதானே நானும் எதிர்பார்த்தேன்.”
“அதான் ஒரு மந்திரிப் பதவி, மாசந்தோறும் ஐ.சி.ல நூறு வெள்ளி, அம்பது வெள்ளி, பேங்க்ல மூணு மாசத்துக்கு ஒரு முறை காசெல்லாம் போடறாங்கள. பெட்ரோல் சப்ஸிடி எல்லாம் இருக்கே. இது பத்தாதா?” என்றான் கவின்.
கார்த்திக் எப்போதும் எங்கு போனாலும் எல்லோருடனும் அரசியல் பற்றித்தான் பேசுவான். கவினுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். என்ன இருந்தாலும் கார்த்திக் அவனுக்கு நண்பனாச்சே. அவனும் ஒப்புக்கு ஏதோ சொல்வான்.
“நீ என்ன, எந்த உலகத்துல இருந்துக்கிட்டு பேசறன்னு எனக்குத் தெரியல. உனக்கு நீ எடுக்கிற சம்பளம் போதுமா?”
அந்தச் சீனப் பெண் அவர்கள் கேட்ட பசியாறலைக் கொண்டு வந்தாள்.
“லாம்பாட்...” என்று இழுத்து, அவளைப் பார்த்து புன்னகைத்தான் கவின். அவ்வளவு அழகு.
“ஹரி இனி ராமாய் ஓராங்,” என்றவள், விறுவிறுவென்று பின் கட்டுக்குச் சென்றாள்.
“என்ன, ச்சா சியு பாவ் வர வர சின்னதாயிக்கிட்டே போவுது?”
“இப்பத் தெரியுதுல்ல. உன் ச்சா சியு பாவுதான் இப்ப நம்ம நாட்டோட நெலம.”
கார்த்திக் ஸ்ட்ராவில் ஐஸ் தேநீரை இழுத்து சுவைத்தான். பிறகு லோ மாய் காயை பிளாஸ்டிக் தட்டில் கவிழ்த்து, அதன் மேல் கம்போங் கோ ச்சில்லி சோஸை போத்தலிலிருந்து நிறையவே கொட்டினான். கரண்டியால் பூலூர் அரிசிச் சோற்றையும் கொஞ்சம் கோழி இறைச்சியும் சேர்ந்தாப்பில் எடுத்து வாய்க்குள் நுழைத்தான்.
“அப்ப, போகப் போக பாவ் இன்னும் சின்னதா ஆகிட்டே இருக்குமா?” என்று கேட்டான் கவின்.
“உன் பாவைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா உன் செலவு கூடும். காசு சேமிக்க நினைச்சா சேமிக்க முடியாது. நீ, லோ மாய் காய்யே கேட்டிருக்கலாம்.”
“நீ சொல்லறதும் சரிதான். இப்படியே போயிக்கிட்டு இருந்தா, நான் எப்படா கல்யாணம் செய்யறது? நீ பரவால. நீ செய்யிற வேலைக்கு நல்ல சம்பளம் கிடைக்குது. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்ட. எனக்கு அடுத்த வருசம் 35 வயசாகிடும். என்ன செய்யப் போறன்னு தெரியல. இன்னும் தம்பி தங்கைங்க வேற இருக்காங்க,” பன்றி இறைச்சிப் பாவை மென்றவாறு கவின் தன் சோகத்தை வெளிப்படுத்தினான்.
“அதனாலத்தான் இப்போ நம்மவங்க ஒரு பிள்ளை, ரெண்டு பிள்ளையோடு நிறுத்திக்கிறாங்க.”
“அப்படின்னா, நான் இந்த ஜென்மத்துல கல்யாணம் செய்ய முடியாதா?”
“நீ இப்படி யோசிக்கிற. நானோ ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோமுன்னு இப்ப யோசிக்கிட்டு இருக்கேன். எல்லாம் ஒன்னுதான். இக்கரைக்கு அக்கரை பச்சை.”
பேசிக்கொண்டே லோ மாய் காயை முடித்துவிட்டான் கார்த்திக். தே ஐஸ்ஸை உறிஞ்சினான்.
“இன்னும் ரெண்டு வருசத்தில இன்னொரு தேர்தல் வந்திடுமே,” கவின் பாவை சாப்பிட்டு முடித்து தேநீரைச் சுவைத்தான்.
“வரட்டும்... வரட்டும்.”
“ரொம்ப சாதாரணமா சொல்லற. நானே யாருக்கு ஓட்டுப் போடலாம், போடக் கூடாதுன்னு குழம்பிப் போயிருக்கேன்.”
“எல்லாத்துக்கும் இருக்கும் குழப்பம்தான்.”
“பேசாம இப்ப இருக்கிறவருக்கே ஓட்டு போடலாமான்னு இருக்கேன்.”
“ஏன், மத்தக் கட்சியெல்லாம் எதுக்கு இருக்கு? சும்மா போட வேண்டியதுதானே?”
“இதோட மோசமாயிட்டா என்ன செய்யறது?”
“ அஞ்சி வருசத்துக்கப்புறம் இன்னொரு கட்சிக்கு ஓட்டு போட வேண்டியதுதான்.”
“இப்படியே மாறி மாறி ஓட்டுப் போட்டுக்கிட்டு இருந்தா நாம என்னத்துக்கு ஆவோம்?” கவினுக்கே தன் மீது ஆச்சர்யமாகிப் போனது. அவனே இப்போது அரசியல் பேசுகின்றான்.
“நாம ஒன்னுத்துக்கும் ஆக மாட்டோம். இப்படியேதான் இருப்போம். சரி உன் கல்யாணத்தைப் பத்தி என்னத்த யோசிச்சி வெச்சிருக்க?”
“எனக்கு தமிழ் பெண்களே பிடிக்கலடா,”என்றான் கவின். அவன் கண்கள் ஆர்டர் எடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தன.
“அதான் ஸ்க்கூல் படிக்கிற காலத்திலேயே நீ சீனத்திங்க பின்னாடியே சுத்துவேன்னு தெரியுமே. அதனாலத்தான் உனக்கு இப்ப வரைக்கும் கல்யாணமே ஆகல. ஐயாவுக்கு நம்ம பொன்னுங்கன்னா ரொம்ப இளக்காரமோ?”
“அப்படி இல்லடா. எப்படியாச்சும் நான் ஒரு சீனத்தியை கல்யாணம் பன்னிக்கிட்டு பணக்காரனாகனும்.”
“உனக்கு அவ்வளவு ஆமோய் கூட்டாளிங்க இருந்தும் ஒன்னும் அகப்படலையா?”
“யாருமே என்னனை அப்படி நெனைச்சிப் பழகலியே.”
“நீதான் இப்போல்லாம் எங்கேயும் உருப்படியா போறதில்லையே. வேலையை மாத்த சொன்னாலும் மாத்த மாட்டேங்கிற. அப்புறம் எப்படி ஆ மோய் சிக்கும்?”
“ஏதாச்சும் வழி இருக்கா?”
“இருக்கு.”
“எப்படி?”
“நீ இந்தக் கடைக்கு அடிக்கடி வரனும்.”
“இந்த ஆ மோய் ...?”
“அதான் உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுதே.”
“முடியுமா? பார்க்க அழகாவும் ரொம்ப நல்லவளாகவும் தெரியிறா.”
“முயற்சி செஞ்சிப் பாரு. உனக்கும் கேந்தோனீஸ் பாஷை நல்லா வரும்ல.”
“சரி. தினமும் முடியாட்டியும் வாரத்துக்கு மூனு தடவையாவது வரப் பார்க்கிறேன்.”
“இனிமே எனக்கு லோ மாய் காய் ...”
கவின் பற்களைக் காட்டி இளித்தான். அவன் மண்டைக்குள் வேறு கற்பனைகள் உருண்டோடின. பிறகு சட்டென அவனுக்கு ஏதோ ஒன்று தோன்றியது.
"அப்போ ...நான் இவ்வளவு நாள் கல்யாணம் செய்யாததுக்கு நம்ம அரசாங்கமும் ஒரு காரணம்ல?"
"ம்ம்ம் ... அப்படியும் வெச்சிக்கலாம் ..."
முற்றும்


Comments
Post a Comment