கட்டுரை
எம். பிரபு
நாம் இந்த நாட்டின் மக்களாக பல நூற்றாண்டுகளாக அமைதியாகவும் வளமாகவும் வாழ்ந்து வருகிறோம். பல சிரமங்களையும் பிரச்சினைகளையும் நாம் ஒன்றாக எதிர்கொண்டு, மக்களும் நாடும் நலமாக இருக்க முயன்றிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பல இன மக்களின் ஒத்துழைப்பால்தான் நாம் மாற்றங்களை கண்டு வருகின்றோம்.
ஒரு காலத்தில் இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களையும் ஒன்றிணைப்பது கடினமான விசயமாகப் படவில்லை. அந்த நெருக்கமான உறவினால்தான் மலாய் மொழி பிற மொழிகளையும் கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றோடொன்று கலந்துள்ளன.
ஆனால் சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் பல இன மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் பதிவுகளை நாம் அடிக்கடி பார்க்கின்றோம். இந்த இன, மத மற்றும் கலாசார உணர்வுகளை காயப்படுத்தும் மக்கள் வெளிநாட்டவர்கள் அல்ல; நம் நாட்டில் பிறந்தவர்களே. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அபாயமும் கூட.
மலேசியா ஒரு இன மக்களுக்கு மட்டும் சொந்தமான புதிய நாடு அல்ல. இங்கு பிறந்த அனைவருக்கும் இந்த நாடு சொந்தம். ஆனால் சில பொறுப்பற்றவர்கள் நாட்டின் வரலாற்றை அறியாதவர்கள்போல் நடந்து கொண்டு, பல நூற்றாண்டுகளாக உருவான இன ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர்.
யாரும் இந்த பூமியில் நிரந்தரமாக வாழப் போவதில்லை. ஆகவே நம்மைச் சுற்றி வாழும் மக்களின் வரலாறும் பின்னணியும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால் இன்னும் சிலர் இந்த நாட்டில் உள்ள பிற இன மக்களின் பழக்கவழக்கங்களையும் கலாசாரத்தையும் அறியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இது எல்லோருக்கும் பேராபத்து.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நாட்டில் உள்ள பல இன மக்கள் வேறு வேறு இடங்களில் வாழ்ந்தனர். அதனால் அவர்களுக்குள் தூரம் ஏற்பட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லா இன மக்களும் பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றோம். இருந்தாலும் நம் சொந்த நாட்டிலேயே நாம் ஒவ்வொருவரும் இன்னும் தூரமாக இருப்பது போலவே உள்ளது. பெரும்பாலும் நாம் இன்னும் தத்தம் சொந்த இனத்தவரோடு மட்டுமே குழுவாக உறவாடிக் கொண்டிருக்கின்றோம்.
ஒரு இடத்தில் இரண்டு இன மக்களுக்குள் விரும்பாத சம்பவம் நடந்தால், அது உடனே சமூக ஊடகங்களில் பரவுகிறது. அந்த சம்பவம் அந்த இடத்திலேயே முடிந்திருந்தாலும், சமூக ஊடகங்களில் மக்கள் வாரங்கள் முழுவதும் சண்டையிடுகின்றார்கள். இது மிகவும் வருத்தமான விரும்பத்தகாத ஒன்றாகும்.
முன்பும் இனங்களுக்கு இடையில் விரும்பாத சம்பவங்கள் நடந்துள்ளன. இல்லையெனில் மே 13 போன்ற துயரமான சம்பவம் நடந்திருக்காது. ஆனால் அந்த நிகழ்வுக்குப் பிறகு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாற்றமும் உண்டாகின.
ஏன் மனிதர்களுக்கு தங்கள் சொந்த இனத்தையும் மதத்தையும் மட்டுமே பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும், உயர்த்திப் பேசும் பழக்கமும் இருக்கிறது? இது நம்முடைய இயல்பான மனநிலை அல்லது மரபணுவில் இருக்கும் ஒரு குணமாக இருக்கலாம். இதை கட்டுப்படுத்த அதிகாரிகளின் கண்காணிப்பும், ஒவ்வொருவரின் சுய கட்டுப்பாடும் மிக மிக அவசியமாகும்.
ஒரு இனத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு இனத்தின் மதத்தையோ கலாசாரத்தையோ அவமதித்தால், அந்த இன மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். அவர்கள் கோபப்படுவது இயல்பானதே.
அப்படியானால் இந்த பிரச்சினையை எப்படி கட்டுப்படுத்தலாம்?
பொருப்பானவர்கள் சமூக ஊடகங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். இன, மத, அரசியல் தொடர்பான (3R) வெறுப்பை தூண்டும் பதிவுகளை தானாகவே நீக்கும் ஒரு முறைமை இருக்க வேண்டும். அவசியமெனில் தவறு செய்யும் சமூக ஊடக கணக்குகளைத் தடை செய்யவோ அபராதம் விதிக்கவோ வேண்டும்.
தேசிய ஒற்றுமை துறையும் இந்த பிரச்சினையை மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா இன மக்களும் கலந்து கொள்ளக்கூடிய மற்றும் சமமாக பயன் பெறக்கூடிய திட்டங்களை அதிகமாக நடத்த வேண்டும். வெறும் விருந்து நிகழ்ச்சிகள் மட்டும் போதாது. திட்டங்கள் திட்டமிட்டு முறையாக நடத்தப்பட வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மக்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர்கள் ஒரு இனத்துக்காக மட்டும் போராடுகிறோம் என்று பெருமை பேசக் கூடாது. அவர்களைத் தேர்ந்தெடுத்த அனைத்து மக்களுக்கும் அவர்கள் சேவை செய்ய வேண்டும்.
மலேசிய மக்களின் ஆசை ஒன்றே. இனப் பிரிவு வேண்டாம். அனைவரும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ விரும்புகிறார்கள்; பொருளாதார சுமையின்றி, மன அழுத்தமின்றி வாழ விரும்புகின்றனர்.
ஆக, நமக்குள் வேண்டாமே பிளவு.
Comments
Post a Comment