Skip to main content

நமக்குள் ஏன் பிளவு?

 கட்டுரை

 

 



 

எம். பிரபு

 

 

 

நாம் இந்த நாட்டின் மக்களாக பல நூற்றாண்டுகளாக அமைதியாகவும் வளமாகவும் வாழ்ந்து வருகிறோம். பல சிரமங்களையும் பிரச்சினைகளையும் நாம் ஒன்றாக எதிர்கொண்டு, மக்களும் நாடும் நலமாக இருக்க முயன்றிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பல இன மக்களின் ஒத்துழைப்பால்தான் நாம் மாற்றங்களை கண்டு வருகின்றோம்.

ஒரு காலத்தில் இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களையும் ஒன்றிணைப்பது கடினமான விசயமாகப் படவில்லை. அந்த நெருக்கமான உறவினால்தான் மலாய் மொழி பிற மொழிகளையும் கலாச்சாரங்களையும் உள்வாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றோடொன்று கலந்துள்ளன.

ஆனால் சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் பல இன மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் பதிவுகளை நாம் அடிக்கடி பார்க்கின்றோம். இந்த இன, மத மற்றும் கலாசார உணர்வுகளை காயப்படுத்தும் மக்கள் வெளிநாட்டவர்கள் அல்ல; நம் நாட்டில் பிறந்தவர்களே. இது மிகவும் கவலைக்குரிய விஷயம். அபாயமும் கூட.

மலேசியா ஒரு இன மக்களுக்கு மட்டும் சொந்தமான புதிய நாடு அல்ல. இங்கு பிறந்த அனைவருக்கும் இந்த நாடு சொந்தம். ஆனால் சில பொறுப்பற்றவர்கள் நாட்டின் வரலாற்றை அறியாதவர்கள்போல் நடந்து கொண்டு, பல நூற்றாண்டுகளாக உருவான இன ஒற்றுமையை சீர்குலைக்கின்றனர்.

யாரும் இந்த பூமியில் நிரந்தரமாக வாழப் போவதில்லை. ஆகவே நம்மைச் சுற்றி வாழும் மக்களின் வரலாறும் பின்னணியும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆனால் இன்னும் சிலர் இந்த நாட்டில் உள்ள பிற இன மக்களின் பழக்கவழக்கங்களையும் கலாசாரத்தையும் அறியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இது எல்லோருக்கும் பேராபத்து.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நாட்டில் உள்ள பல இன மக்கள் வேறு வேறு இடங்களில் வாழ்ந்தனர். அதனால் அவர்களுக்குள் தூரம் ஏற்பட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. எல்லா இன மக்களும் பல இடங்களில் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றோம். இருந்தாலும் நம் சொந்த நாட்டிலேயே நாம் ஒவ்வொருவரும் இன்னும் தூரமாக இருப்பது போலவே உள்ளது. பெரும்பாலும் நாம் இன்னும் தத்தம் சொந்த இனத்தவரோடு மட்டுமே குழுவாக உறவாடிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு இடத்தில் இரண்டு இன மக்களுக்குள் விரும்பாத சம்பவம் நடந்தால், அது உடனே சமூக ஊடகங்களில் பரவுகிறது. அந்த சம்பவம் அந்த இடத்திலேயே முடிந்திருந்தாலும், சமூக ஊடகங்களில் மக்கள் வாரங்கள் முழுவதும் சண்டையிடுகின்றார்கள். இது மிகவும் வருத்தமான  விரும்பத்தகாத ஒன்றாகும்.

முன்பும் இனங்களுக்கு இடையில் விரும்பாத சம்பவங்கள் நடந்துள்ளன. இல்லையெனில் மே 13 போன்ற துயரமான சம்பவம் நடந்திருக்காது. ஆனால் அந்த நிகழ்வுக்குப் பிறகு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாற்றமும் உண்டாகின.

ஏன் மனிதர்களுக்கு தங்கள் சொந்த இனத்தையும் மதத்தையும் மட்டுமே பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும், உயர்த்திப் பேசும் பழக்கமும் இருக்கிறது? இது நம்முடைய இயல்பான மனநிலை அல்லது மரபணுவில் இருக்கும் ஒரு குணமாக இருக்கலாம். இதை கட்டுப்படுத்த அதிகாரிகளின் கண்காணிப்பும், ஒவ்வொருவரின் சுய கட்டுப்பாடும் மிக மிக அவசியமாகும்.

ஒரு இனத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு இனத்தின் மதத்தையோ கலாசாரத்தையோ அவமதித்தால், அந்த இன மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். அவர்கள் கோபப்படுவது இயல்பானதே.

அப்படியானால் இந்த பிரச்சினையை எப்படி கட்டுப்படுத்தலாம்?

பொருப்பானவர்கள் சமூக ஊடகங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். இன, மத, அரசியல் தொடர்பான (3R) வெறுப்பை தூண்டும் பதிவுகளை தானாகவே நீக்கும் ஒரு முறைமை இருக்க வேண்டும். அவசியமெனில் தவறு செய்யும் சமூக ஊடக கணக்குகளைத் தடை செய்யவோ அபராதம் விதிக்கவோ வேண்டும்.

தேசிய ஒற்றுமை துறையும் இந்த பிரச்சினையை மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லா இன மக்களும் கலந்து கொள்ளக்கூடிய மற்றும் சமமாக பயன் பெறக்கூடிய திட்டங்களை அதிகமாக நடத்த வேண்டும். வெறும் விருந்து நிகழ்ச்சிகள் மட்டும் போதாது. திட்டங்கள் திட்டமிட்டு முறையாக நடத்தப்பட வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மக்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவர்கள் ஒரு இனத்துக்காக மட்டும் போராடுகிறோம் என்று பெருமை பேசக் கூடாது. அவர்களைத் தேர்ந்தெடுத்த அனைத்து மக்களுக்கும் அவர்கள் சேவை செய்ய வேண்டும்.

மலேசிய மக்களின் ஆசை ஒன்றே. இனப் பிரிவு வேண்டாம். அனைவரும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ விரும்புகிறார்கள்; பொருளாதார சுமையின்றி, மன அழுத்தமின்றி வாழ விரும்புகின்றனர்.

ஆக, நமக்குள் வேண்டாமே பிளவு.

 

 


Comments

Popular posts from this blog

Daris, Pelukis Cilik

  Bakat                                                               Oleh: M. Mahendran   Bukan semua orang dianugerahkan bakat melukis. Kajian menunjukkan dalam 100 orang cuma 10 hingga 20 orang sahaja menunjukkan minat atau memiliki bakat semula jadi dalam melukis tanpa latihan formal. Kira-kira 1 hingga 5 orang daripada 100 akan mempunyai kemahiran tinggi atau bakat melukis dengan tahap profesional jika mereka berlatih dengan serius. Adik Muhamad Daris Aryan Bin Saiful Bahri merupakan pelajar tahun 4 di SK Sulaiman, Bentong, Pahang.  Minat  Daris  terhadap seni lukisan berputik sejak umur 6 tahun. Saya   berjiran dengan keluarga adik Daris, mengenalinya sejak bayi lagi. Lukisan-lukisannya sering dipaparkan di Facebook oleh ibu nya Puan Diana dan  bapanya  Encik Saiful Bahri . Saya terpegun m...

தமிழ்ப் பள்ளிக்குச் செல்லாதவர்களின் தமிழ்

  கட்டுரை     எம். பிரபு     மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே ஆரம்பக் கல்விக்கூடங்கள் ,   பல மொழிப் பிரிவுகளில் நாடு தழுவிய நிலையில் தொடங்கப்பட்டிருந்தன. ஆங்கிலம் ,   மலாய் ,   தமிழ் ,   சீனப்பள்ளிகள் அந்தந்த இடங்களில்   இனவாரியாக   மக்கட்தொகையை   அடிப்படையாகக் கொண்டுத் தொடங்கப்பட்டதாகும். எப்போது எங்கு என்று ஆராய்ந்து இதைப் பற்றி எழுதினால்,   கட்டுரை நீண்டுக் கொண்டே போகும். இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்பவே எழுத முயற்சிக்கின்றேன். எது எப்படியோ இந்தியர்கள் அந்தக்காலத்திலியே தமிழ்ப் பள்ளி,   ஆங்கிலப் பள்ளி   பிறகு மலாய்ப்பள்ளி (தேசியப் பள்ளி)     அதனைத் தொடர்ந்து அண்மையக் காலமாக சீனப் பள்ளிகளிலும் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர். தமிழ்,   ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைக்   காட்டிலும் மெண்டரின் மொழிப் பயின்றவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் ,   இந்தியர்கள்  சீனப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பதிந்து வருகின்றனர். அதற்கு இன்னொரு முக்கியக் காரணம் , ...

கருப்பான கருப்பா

  சிறுகதை                                                  எம் . பிரபு                                            எனக்கு அழுகை அழுகையா வருது . என் முகமெல்லாம் கண்ணீர். என்னால சாப்பிடக் கூட முடியில . எல்லாம் என் தவறுதான் . என் தவறு இல்லனாலும் , அது என் தவறுதான் . யார் தவறுனும் சரியா புரிய மாட்டேங் கிறது . நல்லவேளை அப்பாவும் அம்மாவும் என்னை ஏசல , அடிக்கல.   அவங்க ஏசியிருந்தாலும்   அடிச்சியிருந்தாலும் , நான் அழுதிருக்க  மாட்டேன் .   நடந்ததை  விட அவங்க ஏச்சு எனக்கு பெருசா படாது . இப்ப அழுதுக்கிட்டு இருக்கேன் . என்னால என் அழுகையை நிறுத்தவே   முடியில . மனசு ரொம்ப கனமாவும் கஷ்டமாவும் இருக்கு . தேம்பித் தேம்பி அழுதுக்கி ட்டே இருக்கேன் . நான் அழுவாம இருக்கனும்னா , அதுக்கு ஒரே வழி மட்டும்தான் இருக்கு . ஆமா , அது நடந்திட்டா நான் அழு...