Skip to main content

மலேசிய தமிழ் எழுத்தாளர்களின் பதிப்பகம்

 

கட்டுரை





எம். பிரபு

அண்மைய காலங்களில் நம் எழுத்தாளர்களும் சலைத்தவர்கள் அல்ல என்பதற்கு அடையாளமாக பல புத்தக வெளியீடுகள் மாதந்தோறும் ஆங்காங்கு நடைபெறுவதைக் காண்கின்றோம். சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் சுயமாக பதிப்பித்து வெளியீடு செய்கின்றனர். நாவல்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வெளிவருகின்றன. சிறுவர்களுக்கான புத்தகங்களும் அவ்வப்போது படைக்கப்படுகின்றன. சிறப்பு; மகிழ்ச்சி.

ஒரு புத்தகத்தை எழுதி, புத்தக வடிவில் பதிப்பித்து வெளியீடு காணும் தருணம் சந்தோசமாக இருந்தாலும்; அதன் செயல்முறையைப் பார்த்தால் போதும் போதும் என்றாகி விடும். பண பலம் மற்றும் ஆள் பலம் பக்கபலமாக இருந்தால் மட்டுமே ஒரு புத்தகத்தை சிறப்பாக வெளியீடு செய்ய இயலும் என்பது மறுக்க முடியாத உண்மை.

புத்தக வெளியீட்டின் போது அரசியல் பிரமுகரை தலைமைதாங்க ஏற்பாடு செய்தால்தான் மக்கள் கூட்டத்தை காணலாம் என்பது இன்னொரு வருந்தத்தக்க நிலைமையாகும். வாசகர்களை நம்பி புத்தகம் போடுகின்றோமா அல்லது தலைவர்களை நம்பி புத்தகம் போடுகின்றோமா? கேள்விக்குறியாகவே உள்ளது.

புத்தகம் வெளியிடுவதற்கு முன்பு, தான் மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு படைப்பாளனா என்று நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இல்லாவிடில் புத்தகம் போடுவதை மறந்து விடுவதுதான் உத்தமம். எழுத்தாற்றலை நன்கு வளர்த்துக் கொண்ட பிறகு மட்டுமே, புத்தகம் எழுத ஆவன செய்யலாம். அதற்கு களமாக பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கு எழுதி பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சில படைப்புகள் நம்மால் சிறப்பாக படைக்க இயலும், பல படைப்புகள் சிறப்பாக அமைந்திடாது. வாசகர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து அதன் பின் வரும் படைப்புக்களை திருந்த எழுவது சிறப்பு. எவ்வளவு காலம் எழுதினாலும் படைப்பு இன்னும் பழைய பாணியிலேயே எழுதிக் கொண்டிருந்தால், வாசகர்கள் நம்மை மறந்துவிடுவர். உடன் இருக்கும் சிலரே புகழ்ந்து தள்ளுவார்கள். அந்த சிலரால்தான் எழுத்தாளர்களுக்கு ஆபத்து.

நாம் எழுதி வெளியிடப்போகும் புத்தகத்தை வாங்கிய வாசகர்கள் அதனை முழுமையாக படிப்பார்களா என்று அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். அரைத்த மாவையே மீண்டும் அரைத்துக் கொண்டிருந்தால், வாசகர்கள் மனதில் நாம் இடம்பெறுவது சிரமமாகும். அதற்கும் மேல், உருப்படாத ஒன்றை எழுதி அதில் பணம் சம்பாதிக்க புத்தகம் போடுவது மிகவும் தவறு. அது வாசகர்களை ஏமாற்றுவதற்கு சமமாகும்.

நவீனத்துவமாக எழுத முடியாவிட்டாலும், முன்பு எழுதியதைக் காட்டிலும் சற்று மாறுபட்டு எழுதிப் பார்த்திட வேண்டும். அதற்காக அச்சு அசலாக தமிழக எழுத்தாளர்கள் எழுதும் பாணியை பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை. மலேசிய மண்ணுக்கு ஏற்ப புதுமையாக நமது எழுத்துப் படிவங்களை வழங்கினாலே போதுமானது.

எல்லா எழுத்தாளர்களும் சுயமாகவே தங்களின் படைப்புக்களைப் பதிப்பிப்பதால்; புத்தக வெளியீட்டன்றே போட்ட பணத்தையாவது எடுத்து விட்டால் தலை தப்பியது என்று எண்ணுவது வழக்கம்.

அதன்பின் மீந்த புத்தகங்களை எவ்வாறு விற்று முடிப்பது என்று எழுத்தாளர்கள் திண்டாடுகின்றனர். வயது குறைந்த எழுத்தாளர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி எப்படியாவது தங்கள் புத்தகங்களை விற்பனை செய்துவிடுவர், ஆனால் வயதானவர்களின் பாடுதான் திண்டாட்டம். வீட்டில் புத்தகங்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் போராடுகின்றனர். இளைஞர்கள் எழுதிய புத்தகங்களும் வியக்கும் அளவிற்கு விற்பனையானதாகவும்  தெரியவில்லை. 

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, நமக்கென்று ஒரு பதிப்பகம்.

அண்மையில் எழுத்தாளரும்  நாவலாசிரியருமான திரு. மணிராமு அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு பரிந்துரை/யோசனையை என்னிடம் தெரிவித்தார். அது மிகவும் உகந்ததாக எனக்குப் பட்டது. சிறப்பான ஒரு யோசனையும் கூட.

அது என்ன யோசனையென்றால் - மலேசிய தமிழ் எழுத்தாளர்களுக்கென்று ஒரு பதிப்பகம் உருவாக்குவதாகும்.

அப்படி ஒரு பதிப்பகம் நிறுவப்பட்டால் - அப்பதிப்பகத்தில் திருத்துநர், பக்க வடிவமைப்பாளர் மற்றும் பல துறைகள் உருவாக்கப்பட்டு எழுத்தாளர்கள் அனைவரும் ஒரே பதிப்பகத்தில் தங்களது புத்தகங்களை குறைந்த விலையில் பதிப்பிக்க வாய்ப்பு உண்டாகலாம்.

அது மட்டுமல்லாது புத்தகங்களை விற்பனை செய்வது மற்றும் விநியோகிக்கும் பொறுப்பையும் பதிப்பகத்தாரே பார்த்துக் கொள்வர். எழுத்தாளர்களின் வேலை எழுதுவது மட்டுமே. வேண்டுமென்றால் தேவைக்கு ஏற்ப புத்தகங்களை பதிப்பாளரிடமிருந்து பெற்று அவர்களும் விற்பனை செய்யலாம்.

இதன் வழி எழுத்தாளர்களின் பணச் சுமையும் குறையும்; புத்தகச் சுமையும் குறையும்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசிய எழுத்தாளர்களுக்கு பல உதவிகள் செய்துள்ளனர். அந்த வகையில் இது போன்றதொரு பதிப்பகத்தை உருவாக்கினால் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் அகம் மகிழ்வர்.

பதிப்பகத்தை உருவாக்குவதோடு மட்டுமல்லாது வாசகர்களை உருவாக்குவதுதான் பதிப்பகத்தின் முதன்மையான செயலாக இருக்க வேண்டும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். வெறுமனே புத்தகங்களைப் பதிப்பித்து யாரும் படிக்கவில்லையென்றால் என்னதான் செய்வது?

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்  இதுபோன்றதொரு திட்டத்தை உருவாக்க நாம்  அனைவரும் ஒத்துழைப்போம்.

 


Comments

Popular posts from this blog

Daris, Pelukis Cilik

  Bakat                                                               Oleh: M. Mahendran   Bukan semua orang dianugerahkan bakat melukis. Kajian menunjukkan dalam 100 orang cuma 10 hingga 20 orang sahaja menunjukkan minat atau memiliki bakat semula jadi dalam melukis tanpa latihan formal. Kira-kira 1 hingga 5 orang daripada 100 akan mempunyai kemahiran tinggi atau bakat melukis dengan tahap profesional jika mereka berlatih dengan serius. Adik Muhamad Daris Aryan Bin Saiful Bahri merupakan pelajar tahun 4 di SK Sulaiman, Bentong, Pahang.  Minat  Daris  terhadap seni lukisan berputik sejak umur 6 tahun. Saya   berjiran dengan keluarga adik Daris, mengenalinya sejak bayi lagi. Lukisan-lukisannya sering dipaparkan di Facebook oleh ibu nya Puan Diana dan  bapanya  Encik Saiful Bahri . Saya terpegun m...

தமிழ்ப் பள்ளிக்குச் செல்லாதவர்களின் தமிழ்

  கட்டுரை     எம். பிரபு     மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே ஆரம்பக் கல்விக்கூடங்கள் ,   பல மொழிப் பிரிவுகளில் நாடு தழுவிய நிலையில் தொடங்கப்பட்டிருந்தன. ஆங்கிலம் ,   மலாய் ,   தமிழ் ,   சீனப்பள்ளிகள் அந்தந்த இடங்களில்   இனவாரியாக   மக்கட்தொகையை   அடிப்படையாகக் கொண்டுத் தொடங்கப்பட்டதாகும். எப்போது எங்கு என்று ஆராய்ந்து இதைப் பற்றி எழுதினால்,   கட்டுரை நீண்டுக் கொண்டே போகும். இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்பவே எழுத முயற்சிக்கின்றேன். எது எப்படியோ இந்தியர்கள் அந்தக்காலத்திலியே தமிழ்ப் பள்ளி,   ஆங்கிலப் பள்ளி   பிறகு மலாய்ப்பள்ளி (தேசியப் பள்ளி)     அதனைத் தொடர்ந்து அண்மையக் காலமாக சீனப் பள்ளிகளிலும் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர். தமிழ்,   ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைக்   காட்டிலும் மெண்டரின் மொழிப் பயின்றவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் ,   இந்தியர்கள்  சீனப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பதிந்து வருகின்றனர். அதற்கு இன்னொரு முக்கியக் காரணம் , ...

சிறுமி நீய்ஹா மதனின் சாதனைகள்

  அனுபவம்      எம்.   பிரபு   நான் தொடக்கப்பள்ளியில் படித்த காலத்திலிருந்தே மணிமேகலை நாயர் அவர்களின் குடும்பத்தை அறிந்திருந்தேன். மணிமேகலையும் அப்போது சிறுமியாக இருந்தார்.    என் தந்தை திரு. எஸ். மாதவன் அவர்கள்   National Union of Plantation Workers ( தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்) அமைப்பில் பொருளாளராகப் பணியாற்றினார். ஒவ்வொரு மாதமும்  அவர் மற்றும் ஓட்டுநர்   திரு. கோவிந்தன் அவர்களுடன் பஹாங்கில் உள்ள பல தோட்டங்களுக்கு Peugeot   404 காரில் சென்று தொழிலாளர்களிடமிருந்து சங்க ச்   சந்தாவை வசூலி ப்பதோடு  தோட்டத் தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிவார்கள். அந்த வயதில் அங்கு நடக்கும் பிரச்சனைகளைப் பற்றி சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த மாதச்   சந்தா,  தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காகவும்   நலனுக்காகவும்  மேற்கொள்ளப்பட்டதாக அறிவேன். பொதுவாக தோட்ட பிரதிநிதிகள் மூலம் மாதச் சந்தா சேகரிக்கப்பட்டன. பள்ளி விடுமுறைகளில் நான் மற்றும் என் சகோதரர் ,  தந்தையுடன் அந்தப் பயணங்களின் போது...