Skip to main content

இனங்களுக்கிடையிலான பிளவு

  

கட்டுரை






எம். பிரபு

ஒரு வருடமல்ல, இரண்டு வருடமல்ல; பல நூறு ஆண்டுகளாக நாம் இந்த மலேசியத் திருநாட்டில் பலவித இனங்களாக வாழ்ந்து வருகின்றோம். ஆனால், நாட்டு மக்களின் ஒற்றுமை அல்லது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் இன்னமும் பின்தங்கியே உள்ளது.

வெளியிலிருந்து பார்த்தால் ஒற்றுமையாக வாழ்வது போன்று காட்சியளித்தாலும், உண்மையில் நாம் அப்படி வாழ்வதாக தெரியவில்லை. அதுவும் முந்தைய காலங்களைக் காட்டிலும் தற்போது நமது ஒற்றுமை மிகவும் வலுவிழந்துள்ளது.

நாமும் மற்றவர்களும் ஓர் இனத்தைப் பற்றி குறை சொல்லாத நாட்கள் இருக்கின்றனவா? கோப்பிக் கடைக்குச் சென்றால் பெரும்பாலானவர்கள் பிற இனத்தைப் பற்றி எதையாவது குற்றம் குறை கூறிக்கொண்டே இருப்பது கண்கூடு.

சமூக ஊடகங்களைப் பற்றி சொல்லத் தேவையே இல்லை. நேரில் மோதிக் கொள்ள வலுவும் தைரியமும் இல்லாததால், எல்லோரும் அங்கு களம் இறங்கி கூச்சமில்லாமல் கண்டதையும் எழுதி, இனங்களுக்கிடையிலான பகைமையை வளர்த்து விடுகின்றனர்.

இதை எல்லாம் அரசாங்கம் பார்த்துக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், கூத்தாடி சந்தோஷப்படுவது போன்று வெறுமனே இருக்கிறது. இதனால் ஏற்படப் போகும் பின்விளைவுகளைப் பற்றி அறிந்திருந்தும், வாய் மூடி மௌனமாக இருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஆம், அவர்களே நாடாளுமன்றத்தில் இதைத்தானே செய்கின்றனர்.

நம் நாட்டு மக்கள் இப்படி ஆனதற்கு என்ன காரணமாக இருக்கக் கூடும்?

நாம் மனிதனை மனிதனாகப் பார்க்காமல், இனம், மதம் என்று பிரித்துப் பார்ப்பதால் வந்த விளைவு இது. மனிதன் என்பதை விட அவனது இனம், நிறம், மதம் ஆகியவை ஒரு மனிதனையும் இன்னொரு மனிதனையும் அதிகப்பட்சமாக வேறுபடுத்திக் காட்டுகின்றன. அதனால், அந்த இன்னொரு மனிதனை அவனும் மனிதனே என்று வெகு விரைவாக ஏற்க மனிதனின் மனம் மறுக்கிறது. இது மிகவும் ஆச்சர்யமும் வேதனையும் கொடுக்கும் விசயமாகும்.

ஒரு மனிதனுக்கு அதே நிலப்பரப்பில் வாழும் இன்னொரு மனிதன்தான் எதிரி. மிகவும் வேடிக்கையாகவும் வியப்பாகவும் உள்ளது.

ஆகவே, ஒவ்வொருவரும் பிறருடன் பழகும் போது, எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் நடந்து கொள்ள கோட்பாடு வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இவ்வளவு காலமாகியும், எங்கேயாவது பரவலாக சீனர், இந்தியர், மலாய்க்காரர்கள் ஒரே மேசையில் தினமும் உட்கார்ந்து சாப்பிடும் காட்சியை பார்க்க முடிகின்றதா? எங்காவது ஓர் மூலையில், அதுவும் என்றைக்காவது தான் நிகழும். இது நமது நாட்டிற்கு ஏற்பட்ட தலைகுனிவாகக் கூறலாம்.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால், ஓர் உண்மை புலப்படும்.

ஒவ்வொரு இனத்தின் செய்கை அல்லது கொள்கைதான் மற்றொரு இன மக்களை முகம் சுளிக்க வைக்கின்றது. பொறாமையும் இன்னொரு காரணம்.

அவை என்னென்ன என்பதை காண்போம்:
· குறைவான சிந்திக்கும் ஆற்றல்
· சோம்பேறித்தனம்
· பொது இடத்தில் நடந்துகொள்ளும் விதம்
· முன்னேற்றம் காணாமல் இருப்பது
· பணபலம்
· பொய் சொல்லுதல்
· ஏமாற்றுதல்
· தற்பெருமை
· சமய விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது
· மது
· நடத்தை
· குடும்பக் கட்டுப்பாடு
· சம உரிமையின்மை

இவை அனைத்தும் எல்லா மனிதர்களிடமும் இருந்தாலும், எவை அதிகப்படியாக ஓர் இனத்திடம் குடிகொண்டிருக்கிறதோ, அதனை வைத்தே ஓர் இனத்தைச் சாடுவது நம் நாட்டு மக்களின் வழக்கமாகி விட்டது.

இவற்றை திருத்திக் கொள்ளாவிட்டால், நாம் எந்தக் காலத்திலும் இந்நாட்டில் ஒற்றுமையாக வாழாமல் வேற்று கிரகவாசிகளைப் போன்றுதான் எல்லோரையும் அணுக வேண்டியிருக்கும்.

கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் படிப்பதோடு மட்டுமல்லாமல் பத்திரிகை, இதழ்கள், பல மொழி புத்தகங்களை அனுதினமும் படித்து, பல துறைகளில் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம்.

வாழும் இந்த சிறிது காலத்தில் நன்றாக உழைத்து சம்பாதிக்க வேண்டும். சொந்தத் தொழிலோ அல்லது சம்பளத்திற்கு வேலை செய்தாலும் சரி, அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பு, பங்கு அல்லது அசையா சொத்து வாங்கிப் போட்டுக் கொள்வது மிகவும் அவசியம். எவ்வளவு சம்பாதிக்கின்றோம் என்பதை விட எவ்வளவு சிக்கனமாக வாழ்கின்றோம் என்பதில் கவனம் இருக்க வேண்டும். யாரிடமும் கடன்படக் கூடாது. பேராசை வேண்டாம்.

பொது இடத்தில் நன்றாக தூய்மையாக உடை அணிந்து செல்வது சிறப்பாகும். நைட்டி அணிந்து தோள் மேல் சிறிய துண்டு போட்டுக் கொண்டு கடைத் தெருவில் சுற்றுவது பார்க்க பைத்தியக்காரத்தனமாகத் தெரியும். பேசும் போதும் உரக்க பேசாது, அமைதியாக நிதானித்து பேச வேண்டும். அண்டை அயலாருக்கு தொந்தரவு கொடுக்காமல் வீட்டில் அடக்க ஒடுக்கமாக வாழ்வது சிறப்பு.

நமக்குத்தான், நம் இனத்திற்குத்தான் எல்லாம் தெரியும், மற்ற இனத்தவர்கள் முட்டாள்கள் என்று தம்பட்டம் அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லோரும் மனிதர்கள் என்ற உணர்வு மேலோங்க வேண்டும்.

சமய விவகாரங்களை வீட்டிலோ அல்லது அதன் தலங்களில் வைத்துக் கொண்டால் மட்டுமே சிறப்பு. வீதியெங்கும் ஊர்வலம் வந்து மதப் பெருமைகளை காட்டத் தேவையில்லை. கடவுள் எங்கும் நிறைந்திருப்பதால் கடவுள் தரிசனத்தை சத்தமில்லாமல் அமைதியாக வழிபட்டாலே கடவுளுக்குப் புரியும். தங்கள் மதத்தை தங்களுக்குள்ளாகவே வைத்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் திணிக்கக்கூடாது. காலத்திற்கேற்ப மதங்கள் அற்ற மனதில் கடவுளை வணங்கினாலே போதுமானது.

மது மற்றும் சிகரெட் போன்றவற்றை அரசாங்கம் முற்றாக ஒழிக்க வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளை அடியோடு நீக்க இது வகை செய்யும். சீனி பயன்பாட்டையும் குறைக்க வேண்டும்.

ஆண் பெண் தங்களது நடத்தையை சரி செய்து கொண்டு வீட்டில் உள்ளவர்களை மதித்து பழக வேண்டும். ஊர் சுற்றுவதை விட்டு விட்டு குடும்பத்திற்கு முக்கியத்துவம் செலுத்த வேண்டும்.

திருமணமான அனைத்து மலேசியர்களும் இரண்டு பிள்ளைகளோடு நிறுத்திக் கொள்ளலாம். நிறைய பிள்ளைகள் பிறந்தால் அதில் 70% உருப்படாமல் போவதற்கு அதிக வாய்ப்புண்டு. திருமணமான தம்பதிகள் எல்லா நேரத்திலும் நேர்மையாக வாழ்க்கையை சந்தோஷமாக புரிந்துணர்வோடு பயணிக்க வேண்டும்.

அரசாங்கம் எல்லா இன மக்களையும் ஒரே மாதிரியாக அனுசரித்து போவது மிகவும் முக்கியமானதாகும். எல்லோருக்கும் சம உரிமை வழங்கி மனிதனாக மதிக்க வேண்டும். தகுதிக்கேற்ப வாய்ப்பு வழங்க வேண்டும், இன அடிப்படையில் அல்ல.

இன்னொரு சிறந்த வழி, ஒரே பள்ளிக்கூடத் திட்டம். எல்லா இன மக்களும் ஒரே மாதிரி தேசியப் பள்ளியில் பயில வேண்டும். பாடத்திட்டத்தில் எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, நாட்டில் உள்ள அனைத்து மொழிகளையும் கட்டாயப் பாடமாக்குதல் அவசியம். தேர்வும் எழுத வேண்டும், அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு எல்லோருடைய பாரம்பரிய வரலாறு, கலை, கலாச்சாரம் கற்பிக்கப்பட வேண்டும்.

சீனரும், மலாய்க்காரர்களும் நம்மோடு சேர்ந்து தமிழில் எழுதிப் படித்தால் தமிழ் மேலும் வலுவாக இந்நாட்டில் வாழும்.

மேல் குறிப்பிட்ட அனைத்தையும் விட, கடைசியாக குறிப்பிட்டதுதான் மிக மிக முக்கியமானதாகும். இனவாரியாக கல்வி இனி நமக்குத் தேவையில்லாத ஒன்றாகும். பள்ளியில் மதக் கல்வி போதிப்பதை தவிர்ப்பது சிறந்ததாகும். அதை தனியாக வெளியே பயிற்றுவிக்கலாம். இனங்களுக்கிடையே பிளவு வராமல் இருக்க, கடைசியாக குறிப்பிட்டதுதான் ஆகச்சிறந்த வழி. முதலில் சிரமமாகத்தான் இருக்கும். போகப் போக சரியாகிவிடும்.

எல்லோரும் ஒற்றுமையாய் மலேசியர்களாக பயணிப்போம்!

Comments

Popular posts from this blog

Daris, Pelukis Cilik

  Bakat                                                               Oleh: M. Mahendran   Bukan semua orang dianugerahkan bakat melukis. Kajian menunjukkan dalam 100 orang cuma 10 hingga 20 orang sahaja menunjukkan minat atau memiliki bakat semula jadi dalam melukis tanpa latihan formal. Kira-kira 1 hingga 5 orang daripada 100 akan mempunyai kemahiran tinggi atau bakat melukis dengan tahap profesional jika mereka berlatih dengan serius. Adik Muhamad Daris Aryan Bin Saiful Bahri merupakan pelajar tahun 4 di SK Sulaiman, Bentong, Pahang.  Minat  Daris  terhadap seni lukisan berputik sejak umur 6 tahun. Saya   berjiran dengan keluarga adik Daris, mengenalinya sejak bayi lagi. Lukisan-lukisannya sering dipaparkan di Facebook oleh ibu nya Puan Diana dan  bapanya  Encik Saiful Bahri . Saya terpegun m...

தமிழ்ப் பள்ளிக்குச் செல்லாதவர்களின் தமிழ்

  கட்டுரை     எம். பிரபு     மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே ஆரம்பக் கல்விக்கூடங்கள் ,   பல மொழிப் பிரிவுகளில் நாடு தழுவிய நிலையில் தொடங்கப்பட்டிருந்தன. ஆங்கிலம் ,   மலாய் ,   தமிழ் ,   சீனப்பள்ளிகள் அந்தந்த இடங்களில்   இனவாரியாக   மக்கட்தொகையை   அடிப்படையாகக் கொண்டுத் தொடங்கப்பட்டதாகும். எப்போது எங்கு என்று ஆராய்ந்து இதைப் பற்றி எழுதினால்,   கட்டுரை நீண்டுக் கொண்டே போகும். இந்தக் கட்டுரையின் தலைப்புக்கேற்பவே எழுத முயற்சிக்கின்றேன். எது எப்படியோ இந்தியர்கள் அந்தக்காலத்திலியே தமிழ்ப் பள்ளி,   ஆங்கிலப் பள்ளி   பிறகு மலாய்ப்பள்ளி (தேசியப் பள்ளி)     அதனைத் தொடர்ந்து அண்மையக் காலமாக சீனப் பள்ளிகளிலும் அதிக எண்ணிக்கையில் பயின்று வருகின்றனர். தமிழ்,   ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளைக்   காட்டிலும் மெண்டரின் மொழிப் பயின்றவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் ,   இந்தியர்கள்  சீனப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை பதிந்து வருகின்றனர். அதற்கு இன்னொரு முக்கியக் காரணம் , ...

கருப்பான கருப்பா

  சிறுகதை                                                  எம் . பிரபு                                            எனக்கு அழுகை அழுகையா வருது . என் முகமெல்லாம் கண்ணீர். என்னால சாப்பிடக் கூட முடியில . எல்லாம் என் தவறுதான் . என் தவறு இல்லனாலும் , அது என் தவறுதான் . யார் தவறுனும் சரியா புரிய மாட்டேங் கிறது . நல்லவேளை அப்பாவும் அம்மாவும் என்னை ஏசல , அடிக்கல.   அவங்க ஏசியிருந்தாலும்   அடிச்சியிருந்தாலும் , நான் அழுதிருக்க  மாட்டேன் .   நடந்ததை  விட அவங்க ஏச்சு எனக்கு பெருசா படாது . இப்ப அழுதுக்கிட்டு இருக்கேன் . என்னால என் அழுகையை நிறுத்தவே   முடியில . மனசு ரொம்ப கனமாவும் கஷ்டமாவும் இருக்கு . தேம்பித் தேம்பி அழுதுக்கி ட்டே இருக்கேன் . நான் அழுவாம இருக்கனும்னா , அதுக்கு ஒரே வழி மட்டும்தான் இருக்கு . ஆமா , அது நடந்திட்டா நான் அழு...